தமிழ்ப் பழமொழிகள் - அ
· அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
· அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
· அகல உழுகிறதை விட ஆழ உழு.
· அகல் வட்டம் பகல் மழை.
· அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
· அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
· அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
· அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
· அடக்கமே பெண்ணுக்கு அழகு.
· அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
· அடாது செய்தவன் படாது படுவான்.
· அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
· அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
· அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.
· அடியாத மாடு படியாது.
· அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
· அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
· அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
· அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
· அந்தி மழை அழுதாலும் விடாது.
· அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
· அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
· அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
· அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
· அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
· அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
· அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
· அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
· அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
· அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
· அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
· அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
· அறச் செட்டு முழு நட்டம்.
· அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
· அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.
· அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
· அறமுறுக்கினால் அற்றும் போகும்.
· அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
· அறிய அறியக் கெடுவார் உண்டா?
· அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
· அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
· அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
· அறிவு இல்லார்தமக்கு ஆண்மையுமில்லை.
· அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
· அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்கவேண்டும்.
· அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
· அற்ப அறிவு அல்லற் கிடம்.
· அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
· அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
· அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
· அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
· அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
No comments:
Post a Comment